உ.வே.சா.வின் பதிப்புக் கூறுகளுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி
பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வகை நூல்களைச் சுவடியிலிருந்து நூல் உருவாக்கம் செய்தார் எனினும், சங்க நூல்களுள், எட்டுத்தொகையில் ஐந்தையும், பத்துப்பாட்டு முழுவதையும் பதிப்பித்துச் சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தான் பதிப்பிக்கும் எந்த ஒரு நூலையும் வெறும் சுவடியின் படியெடுப்பாக அமைக்காமல் பதிப்பினுள் அந்நூல் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தருவது உ.வே.சா.வின் தனித்த அடையாளம். நூலாராய்ச்சி செய்து தன்னுடைய பதிப்பை ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிடும் உ.வே.சா., இந்நூலில் (அ) இவ்வுரையில் வரும் இன்ன கருத்துக்கள் தனக்குப் புலப்படவில்லை என்பதையும் சுட்டிச் செல்வார். அவ்வாறு அவர் குறிப்பிடும் பகுதியுள் ஒன்று ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’. இவ்வகராதி, அதன் பின்புலம், உ.வே.சா.விற்குப் பின்னாளில் அதில் விளங்கியவை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

