பொருண்மையியல் அணுகுமுறையில் வேற்றுமை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகியவற்றைக் கற்பித்தல்
தமிழ் இலக்கண இலக்கியம் கற்பித்தற் பயன் சிறக்கவும் நடைப் பிழை தவிர்க்கவும் பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாவதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கூறின் பொருளையும் சூழல் நோக்கி முறையாகப் கருத்துணர்ந்து தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் என்பது பொருண்மையியல் அணுகுமுறையின் அடிப்படைக் கொள்கையாகும்.
முதல் வகுப்பிலிருந்து பள்ளிகளிலும், பட்டப் படிப்பு வரை கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடம் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதோடு தமிழ் முதன்மைப் பாட வகுப்புகளிலும் மாணவர்கள் இலக்கணம் கற்பதோடு கட்டுரைப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். நல்ல தமிழ் எழுத அறிவுறுத்தும் நூல்களும் இயற்றப்படுகின்றன. இருப்பினும், இக்காலத் தமிழில் அனைத்துப் பயன்பாட்டிலும் முனைவர் பட்ட ஆய்வேடுகள் சிலவற்றிலும் ஒற்று மற்றும் தொடர்ப் பிழைகள் நேர்கின்றன. இலக்கண விதிகளை முறையாக அறியாமையாலும், பிழை நேரக்கூடாது என்னும் எச்சரிக்கை / விழுமிய உணர்வு இன்மையானும் இத்தகைய பிழைகள் வாய்க்கின்றன. இவை மொழி வளர்ச்சியையும் புரிதிறனையும் பாதிப்பதுடன் மரபையும் குலைப்பதால் ஆசிரியர்களும் அறிஞர்களும் பிழை தவிர்ப்பை வலியுறுத்துகின்றனர். இலக்கணக் கல்வியில் பிழை ஆய்வு வளர்ந்துவரும் துறையாகும். இத்தகைய மொழி வழக்காற்றுச் சிக்கலை எதிர்கொள்ளப் பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாவதைக் கற்பித்தலிலும் ஆய்விலும் அறிந்ததால் பட்டறிவுப் பகிர்வாகவும் வேணவாவாகவும் இக் கட்டுரை பயன்பாட்டு நோக்கில் அமைக்கப்படுகின்றது.

